புதுடெல்லி:
சண்டிகரில் உள்ள தனியார் விடுதியில் 2017 ஆம் ஆண்டிற்கான இதய செயலிழப்பு குறித்த உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான இதய நோய் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாடு இதய செயலிழப்பு மற்றும் இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது.
உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மூத்த இதய மருத்துவரான டாக்டர். எச்.கே.பாலி பேசுகையில், ‘இந்தியாவில் இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.குழந்தைகளும் இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டிற்கு 1.3 மில்லியனிலிருந்து 4.6 மில்லியன் வரையிலான மக்கள் இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் போது நவீன உபகரணங்களை பயன்படுத்துவது மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே நோயிற்கான சிகிச்சை பெறுவது இதய நோய்களை கட்டுபடுத்த உதவும்’ என கூறினார்.
இதய செயலிழப்பு நோயிடமிருந்து தற்காத்து கொள்வதற்கான முக்கிய வழிகள் அதற்கு காரணமான இரத்த உயர் அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் ஓபேசிட்டி போன்ற நோய்களை கட்டுபடுத்துவது மூலம் குறைக்கலாம் எனவும் இம்மாநாட்டில் கூறப்பட்டது.