புதுடெல்லி:
தேர்வுகள் நடைபெறும் நேரம் முழுவதிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களுக்கு வருகை தருவார்கள். எனவே, கொரோனா தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்வுகளை நடத்துவதற்குத் திட்டமிடுவது அவசியமாகிறது. இதனால், தேர்வுகள் நடத்தும்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்குப் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
அதில், முக கவசம், தனி மனித இடைவெளி, கைகளை கழுவுதல் உள்ளிட்ட அடிப்படை வழிகாட்டல்களுடன், போதிய இட வசதிகள், இடைவெளி விட்டு தேர்வுகளை நடத்துதல், அறிகுறி இல்லாத அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நோய்க் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள மாணவர்களோ, ஊழியர்களோ தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அறிகுறியற்ற ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மையத்திற்குள் இருக்கும்போது கண்டிப்பாக மாஸ்க் அல்லது பேஸ் கவர் அணிந்திருக்க வேண்டும்.
ஃபேஸ் கவர்கள், மாஸ்க்குகள் மற்றும் சானிடைசர்கள், சோப்பு, சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் போன்ற பிற தனிப்பட்ட பாதுகாப்புகளுக்கான பொருட்கள் தேர்வு நடைபெறும் இடத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இருமும்போதும் தும்மும்போதும் டிஸ்யூ அல்லது கைக்குட்டையால் மறைத்துகொள்ள வேண்டும். அல்லது கையை மடக்கி மறைத்துக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஸ்யூக்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
தேர்வு எழுதுவோர் மற்றும் தேர்வு நடத்தும் அதிகாரிகள் தேர்வு மையத்திற்குள் செல்லும்போது, தங்களின் சுகாதார நிலை குறித்த சுய அறிவிப்பை சமர்ப்பிக்கலாம்.
தேர்வுக்கு முந்தைய பரிசோதனையின்போதோ அல்லது தேர்வு எழுதும்போதோ தொற்று அறிகுறி காணப்பட்டால், அவர்களை தனியாக தேர்வு எழுத வைப்பதற்காக, தேர்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அறை இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.