புனே:
1944-ல் காந்தியை காப்பாற்றிய 98 வயது தியாகி மரணம் அடைந்தார்.
நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன் 1944-ம் ஆண்டும் காந்தியை கொல்ல நாதுராம் கோட்சே முயற்சி செய்தார். மராட்டிய மாநிலம் பாஞ்ச் கனி என்ற இடத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் எல்லோரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
காந்தி தனது உதவியாளர்கள் உஷா மேத்தா, பியாரேலால், அருணா ஆசம் அலி ஆகியோருடன் வந்து கலந்து கொண்டார். அப்போது அங்கு காந்தியை நோக்கி நாதுராம் கோட்சே வேகமாக வந்தார். கையில் கத்தி வைத்திருந்தார்.
இதைப் பார்த்த காந்தியின் ஆதரவாளரான பிகு தஜி பிலாரே, உடனே பாய்ந்து சென்று கோட்சேயை தடுத்தார். கையை முறுக்கி கையில் இருந்த கத்தியை பறித்தார். ஆனால் காந்தி “அவரை (கோட்சேயை) விட்டு விடுங்கள் போகட்டும்” என்று கூறி விட்டார்.
அதன் பிறகு கோட்சேயை பிலாரேயும் மணிசங்கர் புரோகித் என்பவரும் பிடித்துக் கொண்டனர். இந்த சம்பவம் பற்றி கபூர் கமிஷன் விசாரணை நடத்தியது.
அப்போது காந்தியை காப்பாற்றிய பிலாரே அவரைப் பின்பற்றி தொடர்ந்து பல சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். இவர் 1919-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி மராட்டியத்தின் சதாரா மாவட்டத்தில் பிறந்தார்.
சுதந்திரத்துக்கு பின்பு மராட்டிய சட்டசபையில் ஜவாலி தொகுதி எம்.எல்.ஏ. வாக 18 ஆண்டுகள் பணியாற்றினார்.
புனே அருகில் உள்ள பிலார் என்ற இடத்தில் வசித்து வந்தார். 98 வயதான அவர் முதுமை காரணமாக நடமாட்டம் இல்லாமல் இருந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார்.