மதுரை ஐகோர்ட் 
செய்திகள்

தெற்கு ரெயில்வேயில் ரெயில் நிலையங்களில் பேனர் வைக்க தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தென்னக ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் பிரபாகர் என்பவர் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ரெயில் நிலையங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள், பேனர் போன்றவற்றால் ரெயில் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்ய இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தென்னக ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசு பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது. ரெயில் நிலையங்கள், ரெயில் போன்றவை பொது மக்களின் பயணத்திற்காகவே தவிர சங்கடங்களை உருவாக்குவதற்கு அல்ல.

தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ அதன் நிர்வாகிகளோ இந்த உத்தரவுகளை மீறினால், அவர்கள் மீது ரெயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவை தென்னக ரெயில்வே 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT