உயர்நீதிமன்ற மதுரை கிளை 
செய்திகள்

மதயானைப்பட்டி அரசு மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்

மதயானைப்பட்டியில் செயல்படும் அரசு மணல் குவாரியின் செயல்பாட்டை அக்டோபர் 3-ம் தேதி வரை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை:

புதுக்கோட்டை மாவட்டம் மதயானைப்பட்டியில் உள்ள அரசு மணல் குவாரியில், குவாரி விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி சைமன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மணல் குவாரி விதிமீறல் தொடர்பாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவின்படி மணல்  குவாரிகளை ஆய்வு செய்வதற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதயானைப்பட்டி மணல் குவாரியை ஆய்வு செய்து அக்டோபர் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை மதயானைப்பட்டி மணல் குவாரி செயல்பாட்டை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.