சென்னை:
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த மாணவி வளர்மதி(வயது 23) ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.
சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய போது வளர்மதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வளர்மதி கோவையில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறி கடந்த ஜூலை 17-ம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து, வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.