செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணி இடங்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை: 

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 16-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. 

தமிழக அரசின் அரசாணையில் பி.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதி இருந்தது. 

இதனையடுத்து, தமிழக அரசின் இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். 

செல்லமுத்து தனது மனுவில், பி.இ. படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, எம்.இ.-யில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தன்னால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில், செல்லமுத்து மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணி இடங்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.