செய்திகள்

ஹேக்கர்களுக்கு ரூ.1.5 கோடி கொடுத்த எச்.பி.ஒ.

ஹாலிவுட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான எச்.பி.ஒ. பக் பவுண்டி முறையில் ஹேக்கர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சான்பிரான்சிஸ்கோ:

ஹாலிவுட் தொலைக்காட்சி நிறுவனமான எச்.பி.ஒ. சர்வெர்களை ஹேக் செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நிகழ்ச்சி சார்ந்த ஆவணங்களை வெளியிடாமல் இருக்க ஹேக்கர்கள் ரேன்சம்வேர் கேட்டிருந்தனர். மேலும் நிகழ்ச்சியின் வெளிவராத தொடர்களை இணையத்தில் கசியவிடுவோம் என்றும் ஹேக்கர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் ஹேக்கர்களுக்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,60,21,250 எச்.பி.ஒ. பக் பவுண்ட்டி முறையில் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதை கொண்டு சர்வெர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய முடியும். 

பல லட்சம் டாலர்களை கேட்டிருந்த ஹேக்கர்களுக்கு எச்.பி.ஒ. வழங்கிய தொகை மிகவும் குறைவு என்பதால் மேலும் சில ஆவணங்களை வெளியிடுவோம் என ஹேக்கர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெரைட்டி மூலம் தெரியவந்துள்ள புதிய தகவல்களுக்கு எச்.பி.ஒ. சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.

முன்னதாக வெளியான தகவல்களில் மிஸ்டர். ஸ்மித் என அறியப்படும் வீடியோவில் ஹேக்கர்களிடம் வீடியோக்கள், திரைக்கதைகள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் மிக முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஹேக்கர்கள் எச்.பி.ஒ. நிறுவனத்திடம் ஆறு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

ஆறு மாத ஊதியம் 60,00,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாகும். கடந்த வாரம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் திரைக்கதையின் ஒரு பகுதியை ஹேக்கர்கள் வெளியிட்டிருந்தனர். எச்.பி.ஒ. தயாரித்து வரும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நிகழ்ச்சி உலகளவு பிரபலமான தொலைக்காட்சி தொடர் ஆகும். 

எச்.பி.ஒ. சர்வெர்களில் நடத்தப்பட்டுள்ள சைபர் தாக்குதலை எதிர்கொள்ள சைபர் துறை வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு ஈடுபட்டு வருவதாக எச்.பி.ஒ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT