இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடித்து வருகிறது. இந்த ஊழலில் சிக்கியுள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையிலான கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணை, நவாஸ் ஷெரீப்புக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது.
இந்த விசாரணைக்குழு ஏற்கனவே நவாஸ் ஷெரீப்பின் மூத்த மகன் உசேன் நவாசை கடந்த 5 நாட்களில் 3 முறை வரவழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தது.
இந்த கூட்டு புலனாய்வுக்குழுவின் 2 உறுப்பினர்கள், நவாஸ் ஷெரீப் குடும்பத்தினரிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கூட்டு புலனாய்வுக்குழுவின் முன் ஆஜர் ஆவதற்கு நவாஸ் ஷெரீப்பின் இளைய மகன் ஹசன் நவாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய ஜூடிசியல் அகாடமியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற கூட்டு புலனாய்வுக்குழு முன்னிலையில் நேற்று ஆஜர் ஆனார். அவருடன் அவரது கட்சி முன்னணியினரும் வந்தனர்.
அவரிடம் கூட்டு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தி அதை பதிவு செய்ததாக தெரிகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.