குர்கான்:
சுலப் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அரியானாவில் உள்ள பல கிராமங்களில், திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அரியானாவில் உள்ள ஒரு ஊருக்கு ட்ரம்ப் கிராமம் என பெயர் சூட்டப்பட உள்ளதாக சுலப் இண்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் அறிவித்துள்ளார்.
சமூக சேவை நிறுவனமான சுலப் இண்டர்நேஷனல் சார்பில் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் இதனை அவர் அறிவித்தார்.
மேலும், ”இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் அரியானா மாநிலம் மேவட் பகுதியில் உள்ள ஒரு ஊருக்கு ட்ரம்ப் கிராமம் எனப் பெயரிடப்படுகிறது. இதற்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் தூய்மை இந்தியா திட்டம் உலகம் முழுவதும் கவனிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை அறிந்ததும் அந்த கிராம மக்கள் மிகவும் ஆச்சயர்யம் மற்றும் உற்சாகம் அடைந்தனர். மேலும் இதனால் தங்களது வாழ்க்கை ஒளிரும் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை வருகின்ற ஜூன் 26-ம் தேதி வாஷிங்டனில் சந்திக்கும் போது இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.