புரோ கபடி லீக் 2017 போட்டிகள் பல கட்டங்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 6-வது கட்ட போட்டிகள் மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் நேற்று (1-ம் தேதி) தொடங்கியது.
இன்று (2-ம் தேதி) நடைபெற்ற இரண்டாம் நாள் போட்டியில் ’ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்தன. இப்போட்டியில், அரியானா அணி 42-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், அரியானா அணியின் பிரசாந்த் 14 தொடுபுள்ளிகளும், குஜராத்தின் சச்சின் 13 தொடுபுள்ளிகள் எடுத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அரியானா அணி ’ஏ’ பிரிவில் 28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. குஜராத் அணி 42 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
மற்றொரு போட்டியில் ’பீ’ பிரிவில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டி 26-26 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. உ.பி. அணியின் நிதின் தோமர் 10 தொடுபுள்ளிகளும், பெங்கால் வாரியர்ஸின் மணிந்தர் சிங் 8 தொடுபுள்ளிகளும் எடுத்தனர்.
’பீ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் பெங்கால் அணி 35 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், உ.பி. அணி 33 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.