டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர் சீசனில் இந்த காலக்கட்டத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, மிகவும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக காலை வேளையில் அருகில் இருப்பவர்கள்கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் மீறி சில இடங்களில் விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், அரியானா மாநிலத்தில் ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் சென்றபோது மூடுபனி காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. சுமார் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.