செய்திகள்

சவுதியில் தங்கியிருப்பது ஏன்? ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் விளக்கம்

ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி, நாட்டின் எதிர்கால சூழ்நிலை மற்றும் சுற்றியுள்ள நாடுகளுடனான உறவுகள் பற்றி ஆலோசிப்பதற்காக சவுதியில் தங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

மாலை மலர்

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி கடந்த 3-ம் தேதி திடீரென சவுதி அரேபியாவுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் தொலைக்காட்சியில் தோன்றி பேசிய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், தொடர்ந்து அவர் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அவருக்கு நெருக்கமான லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் அவரது ராஜினாமாவை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். சவுதியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதிபர் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஹரிரிக்கு பிரான்ஸ் நாடு அழைப்பு விடுத்துள்ளது. ஹரிரி மற்றும் சவுதி இளவரசரிடம் பேசியபிறகு அழைப்பு விடுத்திருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். எனவே, ஹரிரி பிரான்ஸ் நாட்டிற்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சவுதியில் இருந்து விரைவில் நாடு திரும்புவதாக ஹரிரியும் கூறி வருகிறார்.

இந்நிலையில், சவுதியில் தொடர்ந்து தங்கியிருப்பது குறித்து ஹரிரி டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.