கைது 
செய்திகள்

திருச்சுழி அருகே பெண் கொலை: பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது

பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணை கொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ராணி சேதுபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் சத்யபாமா (வயது50). கணவர் இறந்து விட்ட நிலையில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த இவர், சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள சோளக்காட்டில் மர்மமாக இறந்து கிடந்தார்.

பரளச்சி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சத்யபாமா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து எம்.ரெட்டியபட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இதில் சோலையப்பன் (38) என்பவருக்கும், சத்ய பாமாவுக்கும் தொடர்பு இருந்ததும், அவர்கள் சோளக்காட்டில் தனியாக இருந்ததை அழகர்சாமி என்பவர் பார்த்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து அழகர்சாமி, நாகநாதன், முத்துமணி ஆகியோர் சோலையப்பனை கத்திமுனையில் மிரட்டி சத்யபாமாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் உடன்படாததால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என சோலையப்பனையும் மிரட்டிச் சென்றது தனிப்படை விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கோவையில் பதுங்கி இருந்த அழகர்சாமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நாகநாதன், சோலையப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கமுதி அருகே உள்ள சிங்கபுலிபட்டியை சேர்ந்த முத்துமணியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அழகர்சாமி மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.