செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கலக்கும் 17 வயது சிறுவன்

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்த அர்ஷ் அலி என்ற 17 வயது சிறுவன் 2015-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறையில் பணியாற்றி வருகிறார். #ArshAli #NationalMuseum #ArchaeologyDepartment

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் அர்ஷ் அலி. இவருக்கு சிறுவயது முதல் தொல்லியல் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.

இதையடுத்து அர்ஷ் அலி தனது திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம், 2015-ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் தொல்லியல் பணியை துவக்கினார். அதன்பின் டெக்கான் கல்லூரியைச் சேர்ந்த வசந்த் சிண்டேவுடன் இணைந்து சிந்து பள்ளத்தாக்கில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டார். இவர் சமீபத்தில் எகிப்தில் புத்த மதம் பரவியது குறித்து ஆய்வு செய்து, அதனை பற்றி, தேசிய அருங்காட்சியகத்திலும், உலக விரிவுரை தொகுப்பு நிகழ்ச்சியிலும் பேசியுள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது இந்திய வேதங்களை ‘ஹியரோக்ளிஃப்ஸ்’ எனப்படும் குறியீடு மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்து வருகிறார். அர்ஷ் அலி குறித்து பேசிய தேசிய அருங்காட்சியகத்தின் பொது இயக்குனர் பி.ஆர். மணி, 2015-ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் முதல்முறை சந்தித்ததாகவும், அப்போதே முழுமையாக ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அர்ஷ் அலி ஒரு ஆச்சரியமான சிறுவன் எனவும் பி.ஆர். மணி தெரிவித்துள்ளார். சிறுவர்களும், இளைஞர்களும் செல்போன் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நேரத்தை வீணடித்து வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உலக அளவில் தொல்லியல் துறையில் முன்னேறி வருவது நாட்டை பெருமையடையச் செய்கிறது. #ArshAli #NationalMuseum #ArchaeologyDepartment

SCROLL FOR NEXT