செய்திகள்

நண்பர்களின் சவாலை நிறைவேற்ற பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த வாலிபர்

நண்பர்களின் சவாலை நிறைவேற்ற பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த காரைக்குடி வாலிபரை மண்டபம் மரைன் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

காரைக்குடியை சேர்ந்தவர் இப்ராகிம்,(வயது28). டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் ராமேசுவரம் பாம்பனுக்கு சுற்றுலா வந்தார். பாம்பன் பாலத்தில் நின்றபடி கடல் அழகை ரசித்தனர்.

அப்போது நண்பர்கள் பாலத்தில் இருந்து கடலில் குதிக்க முடியுமா? என்று இப்ராகிமிடம் சவால் விடுத்தனர். ஆபத்தை உணராமல் சவாலை ஏற்ற இப்ராகிம், 150 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து கடலில் குதித்தார்.

கடலில் நீரோட்டம் குறைவாக இருந்ததால் சிரமத்துடன் நீந்தி பாலம் தூண் அருகில் உள்ள பாறை மீது ஏறி நின்று இப்ராகிம் உயிர் தப்பினார்.

தகவலறிந்த மண்டபம் மரைன் போலீசார் ரோந்து படகுடன் சென்று வாலிபரை மீட்டு, கரைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இப்ராகிமின் உறவினர்களை போலீசார் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.