செய்திகள்

குட்கா ஊழல் வழக்கு - தேர்தல் டி.ஜி.பி.யிடம் சி.பி.ஐ. விசாரணை

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தேர்தல் டி.ஜி.பி.யிடம் 2-வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

சென்னை:

குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். ஆனாலும் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தற்போது தேர்தல் டி.ஜி.பி.யாக உள்ள அசு தோஷ் சுக்லாவிடமும் கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனராக சில மாதங்கள் பணியில் இருந்த நேரத்தில் குட்கா ஊழல் வழக்கில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

இதனால் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அசு தோஷ் சுக்லாவை வரவழைத்து 2-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.