செய்திகள்

அதிகாரிகளுக்கு லஞ்சம்: மாதவராவின் தரகர்கள் 2 பேரிடம் விசாரணை தீவிரம்

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு உதவியாக இருந்த மாதவராவின் 2 தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #GutkaScam

மாலை மலர்

குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குட்கா அதிபர் மாதவராவ், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு இடைத்தரகர்களாக ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர் செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று காலையில் இவர்கள் இருவரும்தான் சி.பி.ஐ. பிடியில் முதலில் சிக்கினர். இவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைக்க இருப்பதாகவே தகவல் வெளியானது. ஆனால் மாதவராவ் அவரது பங்கு தாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். தரகர்களான நந்தகுமார், ராஜேந்திரன் இருவரிடமும் தொடர்ந்து சி.பிஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இன்று 2-வது நாளாக விசாரணை நீடிக்கிறது. குட்கா வழக்கில் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சாட்சிகளாக சேர்க்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. #GutkaScam