செய்திகள்

ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலையில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆண்மை நீக்க வழக்கில் ஜாமின் வழங்கி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GurmeetRamRahim

அரியானா:

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனை அடுத்து,  அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் சிக்கி 38-க்கும் அதிகமானோர் பலியாகினர். பொதுச்சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்தது. 

தனது ஆதரவாளர்கள் சுமார் 400 பேருக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் மீது ஒரு வழக்கு உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி பஞ்ச்குலா சிபிஐ கோர்ட்டில் முறையிட்டிருந்தார்.

அவரது மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜகதீப் சிங், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

ஜாமின் பெற்றாலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.