செய்திகள்

பாகிஸ்தான்: வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - 13 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று முகமூடி அணிந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குட்பட்ட பெஷாவர் நகரில் அரசுக்கு சொந்தமான வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளது. முஹம்மது நபியின் பிறந்தநாள் என்பதால் இந்த பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புர்கா அணிந்தபடி இந்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 15 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தாக்குதல் நடத்திய 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடும் நிலையில் இச்சம்பவத்துக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது தாக்குதலின் இலக்கு பல்கலைக்கழகம் அல்ல என்றும் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தை நடந்த முயற்சி என்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT