கும்மிடிப்பூண்டி:
சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை புறபட்ட ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது உயர் அழுத்த மின்கம்பத்தில் உள்ள இன்சூலேட்டர் உடைந்து மின்வயர் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்தடை ஏற்பட்டது. ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் அப்பகுதியிலேயே பாதியில் நிறுத்தப்பட்டது.
இததையடுத்து சென்னை சென்டிரல் கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரெயில் சேவை காலை 6 மணிமுதல் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மார்க்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய மற்றும் சென்னை நோக்கி வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்திலும் காலதாமதம் ஏற்பட்டது. ரெயில்வே துறையினர் மேற்கண்ட பழுதை சரி செய்த பிறகு காலை 10 மணிக்கு மேல் மின்சப்ளையை முழுமையாக்கி ரெயில்களை இயக்குவதற்கான நடவடிக்கையை ரெயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட சம்பவத்தால் இப்பகுதியில் 4 மணி நேரம் அனைத்து ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.