செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மின் இணைப்பை துண்டித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி அருகே மின் இணைப்பை துண்டித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு கிராமத்தில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். எந்திரத்தை 2 மர்ம ஆசாமிகள் கடப்பாறையால் உடைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த டாஸ்மாக் ஊழியர் ஆறுமுகம் என்பவர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தில் உள்ள சிலரை அழைத்து கொண்டு ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார்.

இதனை கண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஏ.டி.எம். மையம் மற்றும் அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளின் மின் இணைப்பை துண்டித்து கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரியவந்தது.

கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை கடப்பாறையால் முழுமையாக உடைத்து விட்டனர். சரியான நேரத்தில் பொது மக்கள் அங்கு திரண்டதால் எந்திரத்தில் இருந்த பல லட்சம ரூபாய் தப்பியது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.