செய்திகள்

அறிவுடையோர் பிராமணர்கள் என்பதால் அம்பேத்கரும், மோடியும் பிராமணர்களே- குஜராத் சபாநாயகர்

நாரதர் அந்த காலத்து கூகுள் என குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பேசியிருந்த நிலையில், அம்பேத்கரும், பிரதமர் மோடியும் பிராமணர்களே என குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார். #Gujarat #BJP

அகமதாபாத்:

பாஜக தலைவர்களுக்கு இது போதாத காலமா என்னவென்று தெரியவில்லை. சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாக பேசி ஊடகங்களிடமும், சமூக வலைதளங்களிலும் விமர்சனத்தை வாங்கி கட்டிக்கொள்கின்றனர். இதனால், மீடியாவுக்கு தீனி போடும் விதமாக பா.ஜ.க.வினர் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

ஆனால், மோடியின் அறிவுத்தலுக்கு பிறகே அக்கட்சி தலைவர்கள் அதிக சர்ச்சையுடன் பேசி வருகின்றனர். மகாபாரதத்தில் இணையதளம், உலக அழகி குறித்து விமர்சனம், சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம் என திரிபுரா முதல்வர் ஒரு பக்கம் தொடர்ச்சியாக பேசி அதிர வைத்து வருகிறார்.

குஜராத் முதல்வராக உள்ள விஜய் ரூபாணி சமீபத்தில் பேசும் போது, “நாரதர் (புராதன கதாபாத்திரம்) அந்த காலத்தில் கூகுள் போன்று இருந்தார். அவருக்கு தெரியாத தகவல்களே இல்லை” என கூறியிருந்தார். இந்நிலையில், பிராமின் பிஸினஸ் சப்மிட் என்ற கூட்டத்தில் குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசும் போது, “அம்பேத்கரை பிராமிண் என்பதில் எனக்கு தயக்கம் இல்லை. அம்பேத்கரின் முதற்பெயரான பாபாசாகேப் அவருடைய ஆசிரியரின் பெயராகும். அறிவார்ந்த எல்லாரும் பிராமணர்கள் என்பதால் அம்பேத்கர், ஏன் பிரதமர் மோடி கூட பிராமணர் தான்” என அவர் பேசியுள்ளார்.

ராஜேந்திர திரிவேதியின் இந்த பேச்சுக்கு அம்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சபாநாயகர் பொறுப்பில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என பதில் அளிக்கப்பட்டுள்ளது. #Gujarat #BJP

SCROLL FOR NEXT