செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா - தமிழக முதல்வருக்கு நேரில் அழைப்பு

குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #PatelStatue #StatueOfUnity #EdappadiPalaniswami

இந்தியாவின் முதல் துணை பிரதரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் தலைவருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே மிக, மிக உயரமான, பிரமாண்ட சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு சிலை தொடக்கப்பணிகள் ஆரம்பித்தன. இதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெறப்பட்டது.

தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி சிலை திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், குஜராத் மாநில அமைச்சர் கன்பத் சின்கா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.