பெங்களூரை சேர்ந்த ஜனாத்தன சர்மா என்பவர் தனது 4 மகள்களை சாமியார் நித்யானந்தாவின் கல்வி நிலையத்தில் சேர்த்திருந்தார்.
சமீபத்தில் 4 மகள்களையும் பெங்களூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றி உள்ளனர். மகள்களை பார்ப்பதற்காக ஜனார்த்தனசர்மா அகமதாபாத் சென்றபோது ஆசிரம நிர்வாகிகள் அவரை உள்ள அனுமதிக்கவில்லை. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை மீட்டனர். லோபமுத்ரா (21), நந்திதா (18) ஆகிய 2 மகள்களும் பெற்றோருடன் செல்ல மறுத்தனர்.
ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்ட 2 மகள்களையும் மீட்டு தங்களிடம் ஒப்படைக்கக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நித்யானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக நித்யானந்தா தலைமறைவானார்.
இந்நிலையில், கடத்தி சிறை வைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட லோபமுத்ரா, நந்திதா ஆகியோர் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே ஆசிரமத்தில் இருக்கிறோம். தேவைப்பட்டால் கோர்ட்டில் ஆஜராக தயாராக இருக்கிறோம் என கூறி இருந்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் அமெரிக்க கண்டத்தில் உள்ள கரீபியன் தீவுப்பகுதியில் இருந்து வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது. நித்யானந்தாவும் அவர்களுடன் அந்த தீவில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதால் அவர் தரை வழியாக நேபாளம் சென்று அங்கிருந்து கரீபியன் தீவுக்கு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
காணாமல் போன 2 பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவும், நித்யானந்தாவால் அந்த குடும்பத்திற்கு எந்தவித மிரட்டலும் வராத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
அந்த பெண்கள் தாங்களாகவே விரும்பி நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருக்க விரும்பினால் அவர்களின் உணர்வுக்கும், சுதந்திரமான முடிவுக்கும் மதிப்பளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.