அகமதாபாத்:
இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று வைரசுக்கு தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.
தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதால் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்தில் மாஸ்க் அணியாத நபர்களுக்கு முதலில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மாநிலத்தில் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் விதிக்கப்படும் அபராதம் ஆகஸ்ட் 1 முதல் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 500-ல் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 500-ல் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 11 முதல் அமலுக்கு வரும்.
கொரோனா பரவலைக் குறைக்கும் ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.