செய்திகள்

குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர், அதிகாரிகள் பதவி விலக கோரிக்கை வலுக்கிறது

குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர், அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.#GutkhaScam #GutkhaCBIProbe

மாலை மலர்

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குட்கா ஊழல் வழக்கை குழிதோண்டி புதைக்க அனைத்து சதிகளும் நடைபெற்று வந்த நிலையில், ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்த வழக்கின் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தொடர்ந்து பதவியில் இருந்தால், இவ்வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முட்டுக்கட்டைப்போட வாய்ப்புள்ளது. எனவே, குட்கா ஊழல் வழக்கின் விசாரணை தடையின்றி நடைபெற வசதியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அம்பலப் படுத்திய வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சரும், அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை ஏற்று, இவ்வழக்கில் அமைச்சர்கள் மற்றும் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வற்புறுத்துவதுடன் சி.பி.ஐ. விசாரணை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.