செய்திகள்

கவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழப்பு 69 ஆக உயர்வு

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. #valcanoeruption

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலைக் குழம்பு சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழப்பு 69 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

எரிமலை வெடிப்பால் சிதறிய சாம்பல் துகள்கள் இறந்தவர்களின் மீது படிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், நெருப்பு குழம்பினால் உயிரிழந்த பலருக்கு ரேகை இல்லாமல் போனதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும்  மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தேசிய தடயவியல் நிறுவன இயக்குனர் ஃபனூயெல் கார்சியா தெரிவித்துள்ளார்.