ராஜபாளையம்:
ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளது. விசைத்தறி தொழிலுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறி தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 12 சதவீத வரி விதிப்பால் தொழில் நசிந்துவிடும். வரியை உடனே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டடம் ராஜபாளையம், சத்திரப்பட்டி, தளவாய்புரம் பகுதிகளில் உள்ள 15 ஆயிரம் விசைத்தறிகள் இன்று மூடப்பட்டன. 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.
இங்குள்ள விசைத்தறிகளில் மருத்துவ துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று ஒரு நாள் நடைபெறும் அடையாள வேலை நிறுத்தத்தில் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்றனர்.