செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து அக்டோபர் 2-ந்தேதி ஆயிரம் இடங்களில் உண்ணாவிரத போராட்டம்: வெள்ளையன்

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து அக்டோபர் 2-ந்தேதி ஆயிரம் இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் பேட்டியில் கூறியுள்ளார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்திற்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் உலக வர்த்தகமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவாக ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே வரி என மோடி அறிவித்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் நகர வர்த்தகர்கள் நுழைந்து விட்ட நிலையில் கிராமப்புற வர்த்தகர்களையும் இணைப்பதற்காக 25,000 வைபை இணைப்புகளை இலவசமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே வரி என்று அறிவித்தாலும் உலக வர்த்தக ஒப்பந்தம் தோற்றுப்போகும். அதற்கு நம் நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம், ஜி.எஸ்.டி வரி இவற்றை எதிர்த்து வருகிற அக்டோபர் 2-ந்தேதி தமிழகத்தில் 1000 இடங்களில் வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டம் மோசடியான அறிவிப்பு. இந்த திட்டத்தால் நமது சுதந்திரமும் பாதிக்கும். 2-ம் தேதி நடக்கவிருக்கிற உண்ணாவிரத போராட்டத்தில் இந்த ஆன்லைன் வர்த்தகத்தின் பாதிப்பை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.