செய்திகள்

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு: சின்னாளபட்டியில் ஜவுளி நிறுவனங்கள் மூடல்

சின்னாளபட்டியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி நிறுவனங்கள் கடை அடைப்பு நடத்தினர்.

சின்னாளபட்டி:

சின்னாளபட்டியில் 300-க் கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இங்கு சுங்குடி சேலைகளுடன் சூரத் மில்ரக சேலைகள், போச்சம்பள்ளி சேலைகள், இளம்பிள்ளை சேலைகள், பெங்களூரு காட்டன் சேலைகள் உள்பட பலவித சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது.

சின்னாளபட்டியில் இருந்து வெளிமாநில, வெளிநாடுகளுக்கு சேலைகள் அனுப்பப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஜவுளி ரகங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனால் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறி சின்னாளபட்டி நகர வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இதையொட்டி சின்னாளபட்டியில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளும் மூடப்பட்டன. ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக பிரிண்டிங் பட்டறை தொழிலாளர்கள், சாயத்தொழிலாளர்கள், சேலைகளுக்கு பார்டர் கட்டை கட்டும் தொழிலாளர்கள், சேலைகளை தேய்க்கும் தொழிலாளர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் சின்னாளபட்டி நகரம் வெறிச்சோடியது. வெளி மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு ஜவுளி வியாபாரத்துக்கு வியாபாரிகள் செல்லவில்லை. கடையடைப்பு போராட்டத்தினால் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT