சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ.500 வரையிலான நுழைவு கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடு வாங்குவோரிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. வரி விகிதங்களை மாற்றி அமைப்பது பற்றி விவாதிக்க மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில அரசு பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அவ்வப்போது கூடி, மத்திய அரசுக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த மாதம் 18-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. சர்க்கஸ், நடனம் மற்றும் அரங்கத்தில் நடைபெறும் நாடகம், விருது நிகழ்ச்சிகள், அழகு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் கோளரங்கம் போன்றவற்றில் நபருக்கு ரூ.250 வரையிலான நுழைவுக்கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விலக்கு உச்சவரம்பை, ரூ.500 ஆக உயர்த்த ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்தது.
அதை ஏற்றுக்கொண்டு, கடந்த மாதம் 25-ந் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. எனவே, கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து, மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ.500 வரையிலான நுழைவுக்கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படுகிறது.
கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இச்சலுகை வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கேளிக்கை பூங்கா, தீம் பார்க், வாட்டர் பார்க், உல்லாச சவாரி, குடை ராட்டினம், கூட்டு நடனம் போன்றவற்றுக்கான நுழைவுக்கட்டணத்துக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதை 18 சதவீதமாக குறைப்பதற்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்தது.
அதை ஏற்றுக்கொண்டு, கடந்த 25-ந் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் சுமை குறைவதற்காக இச்சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அதே சமயத்தில், கேளிக்கை பூங்காக்கள் மீது உள்ளாட்சிகள் விதிக்கும் வரியை மாநில அரசுகள் உயர்த்தக்கூடாது என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், குறைந்த விலை வீடுகளை வாங்குவோரிடம் கட்டுமான நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய வீடுகளின் கட்டுமான பணிகளுக்கு 8 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரியும், உள்ளட்டு வரி ஆதாயம் மூலம் ஈடுகட்டப்படும் என்பதால், வீடு வாங்குவோரிடம் 8 சதவீத ஜி.எஸ்.டி. வரியை கட்டுமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.