கவுகாத்தி:
கடந்த ஜூலை மாதம் முதல் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் படி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த வரிவிதிப்பு முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. அவசரகதியில் கொண்டு வரப்பட்ட வரி விதிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இதனையடுத்து, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு பொருட்களின் வரிகளை குறைக்க இதில் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படுகிறது. விவசாய டிராக்டருக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்படுகிறது. குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் கீழ் வழங்கும் சத்துமாவு 5 சதவிகித வரிவிதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.
திரைப்படம் தொடர்பான சாதனங்கள் 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக கொண்டு வரப்படுகிறது. விளைபொருட்களின் உற்பத்தி கட்டமைப்புக்கான வரி 12 சதவிகிதமாகவும், செங்கல் தொழில் தொடர்பான சில்லரை வேலை மீதான சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக்கடைகளுக்கான சேவை வரியில் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 பொருட்களை மட்டும் 28 சதவிகித வரியின் கீழ் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. சிகரெட் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் பொருள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை 28 சதவிகிதத்திலேயே வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.