செய்திகள்

செம்மண் குவாரி வழக்கு- விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி எம்.எல்.ஏ.ஆஜராகவில்லை

செம்மண் குவாரி வழக்கு நேற்று விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ.ஆஜராகவில்லை. விசாரணையை நீதிபதி 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ponmudimla

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்.எல்.ஏ., ராஜமகேந்திரன், கவுதமசிகாமணி, லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 8 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி 8 பேரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

இதேபோல் பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கும் இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ., விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் அரசு தரப்பில் 6 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கின் விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  #ponmudimla