செய்திகள்

மான்செஸ்டர் தாக்குதல்: ஜூன் 5-ம் தேதி வரை உலக சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார் பாப் பாடகி கிராண்டே

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பாப் பாடகி கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதால், ஜூன் 5-ம் தேதி வரை அவர் தனது இசைப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

மாலை மலர்

லண்டன்:

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் திங்கட்கிழமை இரவு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது இசை நிகழ்ச்சியின்போது தாக்குதல் நடந்ததால் பாடகி ஏரியனா கிராண்டே கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் தனது கவலையையும் இரங்கலையும் டுவிட்டர் மூலம் தெரிவித்தார். பின்னர், செவ்வாய்க்கிழமை புளோரிடாவில் உள்ள தனது சொந்த நகரமான போகா ரேடனுக்கு சென்றார்.

இந்நிலையில், மான்செஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூன் 5-ம் தேதிவரை தனது உலக சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார் பாடகி கிராண்ட். 23 வயதான பாடகி கிராண்டே லண்டனின் ஓ2 அரங்கத்தில் நடத்த இருந்த இரண்டு இசை நிகழ்ச்சிகள், சுவிட்சர்லாந்தில் ஜூன் 5-ம் தேதி நடத்தவிருந்த இசை நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.