சென்னை:
நாடு முழுவதும் 71-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார். அதேபோல், முதலமைச்சர்களும் தங்களது மாநிலங்களில் கொடியேற்றி உரையாற்றினர்.
இதனிடையே, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப மத்திய அரசின் தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ மறுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், திரிபுரா முதல்வர் உரையை தூர்தர்சன் ஒளிபரப்ப மறுத்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், ஊழல் முறைகேடுகளற்ற முதல்வராக நற்பெயர் பெற்றவர். சிறந்த நிர்வாகம் கொண்ட முன்னுதாரண மாநிலமாக திரிபுரா அமைந்துள்ளது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கப்பட்ட வடகிழக்கு மாநிலம் திரிபுரா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அத்தகைய முதலமைச்சரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப தூர்தர்சன் மறுத்துள்ளது. தங்களின் தனியார் சொத்து போல அரசு நிறுவனங்களை நடத்துவது அற்ப அரசியல். ஆர்.எஸ்.எஸ் பாஜக அமைப்புகளின் இந்த எதேச்சார நடவடிக்கை, அறிவிக்கப்படாத அவசரநிலையாகும் - வன்மையான கண்டனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.