மாரடைப்பு 
செய்திகள்

கீரை-மோர் சாதம் சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை மாரடைப்பால் பலி

வில்லியனூர் அருகே கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை மாரடைப்பால் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஆர்த்தி (வயது 28). இவர் ஆசிரியர் பட்டயபடிப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று மதியம் ஆர்த்தி வீட்டில் கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஆர்த்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நூடுல்ஸ் சாப்பிட்ட சுங்க சாவடி ஊழியர் இறந்து போனார். அதுபோல் நேற்று முன்தினம் நண்டு குழம்பு சாப்பிட்ட சின்ன காலாப்பட்டை சேர்ந்த கர்ப்பிணியான முத்துலட்சுமி (29) என்பவர் நெஞ்சு வலியால் இறந்து போனார்.

இப்போது கீரை-மோர் சாதம் சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை இறந்துள்ளார். இதுபோன்று உணவுகளால் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்படுவது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.