பெண் மரணம் 
செய்திகள்

வேல்ராம்பேட்டில் மயங்கி விழுந்த பட்டதாரி பெண் உயிரிழப்பு

வேல்ராம்பேட்டில் பட்டதாரி பெண் மயங்கி விழுந்து இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை வேல்ராம்பேட்டு மக்கள் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் கலைவாணி (வயது24). பட்டதாரியான இவர் வீட்டில் இருந்தபடியே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்து வந்தார். நேற்று முன்தினம் கலைவாணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று நேற்று கலைவாணி வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று மாலை கலைவாணி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே கலைவாணியை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலைவாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கலைவாணியின் தந்தை ராதாகிருஷ்ணன் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.