ஐஎஸ் அமைப்பு 
செய்திகள்

நாட்டின் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது- மத்திய அரசு

நாட்டின் தென் மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறியதாவது:

தென் மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள் ஐ.எஸ் அமைப்பில்  சேர்ந்திருப்பது மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தனது சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில், இணைய அடிப்படையிலான சமூக ஊடக தளங்களைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறது. சைபர்  முகமைகள் இதுதொடர்பாக உன்னிப்பான கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

சர்வதேச அளவிலான சில அமைப்புகளை இந்தியா தடை செய்துள்ளது. மற்றும் அதன் அனைத்து கிளை அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967க்கான முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என தென்னிந்தியா முழுவதும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான 17 வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு  பதிவு செய்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட 122 பேரை கைதுசெய்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT