மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சிலைகள், தூண்களில் விரிசல் ஏற்பட்டது.
தீ விபத்து நடந்த மண்டபத்தை சீரமைக்க 12 நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர் கோவிலில் சேதம் அடைந்த பகுதிகளை பழமை மாறாமல் சீரமைக்க உள்ளனர். இந்த குழுவில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) சத்தியமூர்த்தி, இந்திய தொழில் நுட்பக்கழக உதவி பேராசிரியர் அருண் மேனன், கோவில் இணை ஆணையர் நடராஜன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, சிற்பி குமார், மதுரை பொதுப்பணித்துறை பொறியாளர் சுரேஷ், கோவில் என்ஜினீயர் உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அரசு அமைத்த இந்த குழுவினர் இன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் விபத்து நடந்த வீர வசந்தராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டப பகுதிகள், தூண்களில் சேதம் ஆகியவற்றை பார்வையிட்டனர். #tamilnews