செய்திகள்

வெளிநாட்டிற்கு தப்பிவிடுவார் என்பதால் கார்த்தி சிதம்பரம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: மத்திய அரசு

வெளிநாட்டிற்கு தப்பிவிடுவார் என்பதால் கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இந்த உத்தரவு புறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT