புதுடெல்லி:
பாராளுமன்றம் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய பாதுகாப்பு துறை இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே பதிலளித்தார். அப்போது, நாட்டின் 22 மாநிலங்களில் மொத்தம் 26 ராணுவ பள்ளிகள் உள்ளதாகவும், புதியதாக 21 பள்ளிகள் தொடங்குவதற்கான திட்டம் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார்.
மற்றொரு துணைக் கேள்விக்கு பதிலளித்த அவர், ராணுவ பள்ளிகளில் மாணவிகளை சேர்ப்பது குறித்த திட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதற்கான முடிவை கூடிய விரைவில் அமைச்சரகம் எடுக்கும் என தெரிவித்தார்.
ராணுவ பள்ளிகளுக்கு 2017-18 ஆண்டிற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளிகள் மூலம் மாணவர்கள் தேசிய பாதுகாப்பு படையில் சேர்க்கப்படுகின்றனர். 2016-ம் ஆண்டில் 159 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அதில் 31 மாணவர்கள் ராஷ்டிரிய ராணுவ பள்ளிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.