களக்காடு:
தென்காசியில் இருந்து நேற்றிரவு 8 மணிக்கு வள்ளியூர் டெப்போவை சேர்ந்த ஒரு அரசு பஸ் வள்ளியூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். முருகன் நடத்துனராக இருந்தார்.
அந்த பஸ் நள்ளிரவு 11.30 மணியளவில் களக்காடு அருகே சிங்கம்பத்தில் வந்த போது பஸ்சுக்கு பின்னால் பைக்கில் 2 மர்ம நபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் பஸ்சை முந்தி சென்று, பஸ்சை கற்களை வீசி தாக்கினர்.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து பஸ்சின் மீது கற்களை வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக பஸ்சின் மீது கற்கள் வீசப்பட்டதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.