ராயபுரம்:
திருவொற்றியூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 55). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அவர் பிராட்வே பஸ்நிலையத்துக்குள் நடந்து சென்றார். அப்போது கண்ணகிநகரில் இருந்து (எண்.102ஏ) மாநகர பஸ் உள்ளே வந்தது. திடீரென மாநகர பஸ் நடந்து சென்ற காவலாளி ஜெயக்குமார் மீது மோதியது.
இதில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்து பஸ்நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பலியான ஜெயக்குமாரின் சட்டை பையில் அரசு பல் மருத்துவமனைக்கு வந்து சென்ற துண்டு சீட்டு மற்றும் காவலாளி அடையாள அட்டை இருந்தது.
அவரை பற்றிய மற்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கொத்தவால் சாவடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews