செய்திகள்

சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்கள் தடுப்பது நீதிமன்ற அவமதிப்பு - கவர்னர் கிரண்பேடி கருத்து

சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs

மாலை மலர்

புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

புதுவை கவர்னர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த வழக்கில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

மேலும் அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கவும் உத்தரவிட்டது. சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரி கோர்ட்டில் தனலட்சுமி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நியமன எம்.எல்..ஏ.க்கள் நியமனம் செல்லும் எனவும், அவர்களை சட்டசபைக்கு அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தடை எதுவும் வழங்கப்படவில்லை.

எனவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அவர்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும்.