சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் ஆண்டுதோறும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படும்.
அதுபோல் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இதில் கவர்னர் கிரண்பேடியுடனான மோதல் போக்கு காரணமாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அதே நேரத்தில் அரசு அதிகாரிகள் பலரும் தேனீர் விருந்தில் பங்கேற்கவில்லை. இது கவர்னர் கிரண்பேடியை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி தேநீர் விருந்தை புறக்கணித்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்குமாறு தனது செயலர் தேவநீதிதாசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதற்கான காரணத்தை முன்கூட்டியே தெரிவித்து அனுமதியும் பெறவில்லை.
விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்காத அதிகாரிகள் அதற்கான காரணம் குறித்து 3 நாட்களுக்குள் கவர்னரின் தனி செயலாளரிடம் விளக்கம் அளிக்க வேண்டும். உரிய விளக்கம் தராவிட்டால் அவர்களின் தனிப்பட்ட குறிப்பேட்டில் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு கவர்னர் உத்தரவில் கூறியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடியின் இந்த அதிரடி உத்தரவு அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.