செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 மதுக்கடைகள் மூடல்: கவர்னர் கிரண்பேடி அதிரடி

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 மதுக்கடைகளை மூட கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டதையடுத்து 3 மதுக்கடைகள் மூடப்பட்டது.

மாலை மலர்

பாகூர்:

புதுவை கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அதுபோல் நேற்று முன்தினம் முள்ளோடை- பரிக்கல் பட்டு ரோட்டில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் பள்ளி- கல்லூரி அருகில் அதிக மதுக்கடைகள் இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடி அந்த மதுக்கடைகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள சாராய கடைக்கும் சென்று சுற்றி பார்த்தார். அங்கிருந்த குடிமகன்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? என்று கேட்டார்.

பின்னர் அங்கு இருந்த கலால்துறை தாசில்தார் குமரனிடம் பள்ளி- கல்லூரி அருகில் அடுத்தடுத்து மதுக்கடைகள் அமைக்க எப்படி அனுமதி அளித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கும் படியும் கவர்னர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கலால்துறை துணை ஆணையர் ஜான்சன், கலால் தாசில்தார் குமரன் ஆகியோர் நேற்று முள்ளோடை- பரிக்கல்பட்டு ரோட்டில் இயங்கி வரும் மதுக்கடைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 3 பிராந்தி கடை மற்றும் ஒரு சாராய கடை பொதுமக்களுக்கு இடையூறாக வெட்ட வெளிச்சமாக இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிராந்தி கடை, சாராயக்கடையை மூட உத்தரவிட்டனர். அதன் பேரில் 3 பிராந்திகடைகளும் மூடப்பட்டது.