தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும்போது அந்த மாவட்டத்தில் தூய்மை பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி வருகின்றன.
கவர்னரின் செயல்பாடு மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதற்கிடையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். பல்கலைக்கழக விதிகளை மீறி பணி நியமனம் செய்து பல்வேறு மோசடி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணைவேந்தரின் சம்பவம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில் அனைத்து துணைவேந்தர்கள் கூட்டத்தை கவர்னர் கூட்டியுள்ளார். பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள கவர்னர் தமிழகத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம், கால்நடைப் பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக் கழகம், சட்டப்பல்கலைக் கழகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.