செய்திகள்

விமான பயணிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும்: விமான போக்குவரத்து மந்திரி தகவல்

விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு விரைவில் டிஜிட்டல் அடையாள எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, விமான பயணம் செய்பவர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ பதிலளித்து கூறியதாவது:

பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி விமான பயணம் மேற்கொள்பவர்களுக்காக தனி அடையாள எண் வழங்கலாமா என்பது குறித்து

ஆலோசனை நடத்தி வருகிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

பயணிகளுக்கு அடையாள எண் வழங்கப்படுவதால், பல்வேறு விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், டிராவல் ஏஜெண்ட்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் பயணிகளின் விவரங்களை அறிந்து கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில் தொழில்நுட்ப குழுவினர் உள்பட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. பயணிகள் குறித்த அனைத்து விவரங்களும் படிப்படியாக சேகரிக்கப்படும். பின்னர் அவர்களுக்கான தனி அடையாள எண் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.