செய்திகள்

சாத்தூர் அருகே நகை திருடர்களை மடக்கிய அரசு பள்ளி மாணவன்: பொதுமக்கள் பாராட்டினர்

சாத்தூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை மடக்கிப்பிடித்த அரசு பள்ளி மாணவனை பொதுமக்கள் பாராட்டினர்.

மாலை மலர்

விருதுநகர்:

சாத்தூர் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பெத்துரெட்டியபட்டி விலக்கு அருகே டீக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி(40) கடையில் இருந்த போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தண்ணீர் பாக்கெட் கேட்டனர்.

அதை எடுக்க திரும்பிய போது திடீரென்று மகேஸ்வரி கழுத்தில் இருந்த 13 பவுன் நகையை பறித்துக் கொண்டு அவர்கள் ஓடினர். அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார்.

இதனைக்கேட்டு அந்த பகுதியில் நின்றவர்களுடன் சுப்பையாபுரம் அரசு பள்ளி மாணவன் சிவகணேசும் (17), சேர்ந்து நகை திருடர்களை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தான். அங்கு இருந்தவர்கள் சிவகணேசை பாராட்டினர்.

சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புதூரை சேர்ந்த மகாராஜ் (24) மற்றொருவர் கோவில்பட்டி சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த முத்துமுனீஸ்வரன்(28) என தெரியவந்தது.